Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி: பா.ஜ.க.வைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை அளித்து மதம் மாற்றுவது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என அறிவிக்கக் கோரி டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், இந்த மனு நேற்று டெல்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை பரிசீலித்த நீதிபதிகள் பெருமளவில் கட்டாய மதமாற்றம் நடப்பதாக மனுவில் கூறப்பட்டிருப்பதற்கான தரவுகள் எங்கே என்று கேட்டதுடன், பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் வழக்குத் தொடர்ந்துள்ளனரா என்றும் கேள்வி எழுப்பினர்.
மேலும், சமூக வலைதளங்களில் கூறப்பட்டுள்ளவற்றை ஆதாரமாகக் கொள்ள முடியாது என்றும், கட்டாயப்படுத்தப்படாத பட்சத்தில் மதம் மாறுவதற்கு சட்டப்படி தடையில்லை என்றும், ஒருவர் தான் விரும்பும் எந்தவொரு மதத்தையும் பின்பற்ற அரசியலமைப்புச் சட்டத்தில் உரிமை அளிக்கப்பட்டுள்ளது என்ற கருத்தை தெரிவித்தனர். இந்த வழக்கு தொடர்பான விரிவான விசாரணையை ஜூலை 25-ம் தேதிக்கு தள்ளிவைத்து எந்தவித நோட்டீஸையும் பிறப்பிக்காமல் உத்தரவிட்டுள்ளனர்.